Tuesday, February 24, 2015

அதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, 

வணக்கம். பல வருடங்களுக்கு பிறகு உங்களை இந்த பதிவின்மூலமாக மறுபடியும் சந்திக்க வந்துள்ளேன். இந்த பதிவில் இருந்து அதிகமாக அறியப்படாத ஓவியர்களைப்பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். அ.அ.ஓ தொடரில் முதலாமவர் பற்றியதே இந்த குறும்பதிவு.

1931ஆம் ஆண்டு கும்பகோணம் ஓவியப்பள்ளியில் வரைகலையில் தேர்ச்சி பெற்ற சக்ரபாணி என்ற இளைஞர் ஒரு நகைச்சுவை கதையை எழுதினார். இவரது கதையை பாராட்டிய ஓவியர் மாலி, அதனை பிரசுரிக்க சக்ரபாணி என்ற அந்த வாலிபர் அன்றுமுதல் சுதர்ஸனாக மாறிவிட்டார்.


தன்னுடைய மானசீக குருவான மாலியின் பாராட்டு அவரது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது.  சென்னை சௌகார்பேட்டை இந்து தியாலாஜிகள் சொசைட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக இவர் சேரும்போது, நம்பினால் நம்புங்கள், இவருக்கு வயது 19 தான். அன்றுமுதல் தொடர்ந்து பல பத்திரிக்கைகளுக்கு நகைச்சுவை ஓவியங்கள் வரைந்து வந்த இவரது தனித்தன்மையே வார்த்தைகள் இல்லாத துணுக்குகள் தான். 


சுதேசமித்ரன், அமுத சுரபி, கல்கி, மஞ்சரி, குங்குமம், குமுதம், தினமலர் வாரமலர் போன்ற வெகுஜன பத்திரிக்கைகளுக்கும், பூந்தளிர், கண்ணன் போன்ற சிறுவர் பத்திரிக்கைகளுக்கும் தொடர்ந்து நகைச்சுவை துணுக்குகள் வரைந்துக்கொண்டிருந்த இவர் தன்னுடைய 78ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். 
 பூந்தளிர் இதழில் இவரது சிறப்பான தொடர் ஒன்று வெளியானது பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. நாயும், சிறுவனும் என்ற இவரது தொடர் பல பூந்தளிர் இதழ்களில் வெலியானது. ஒரு சிறுவனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்கும் இடையில் நடக்கும் சூட்டிகையான, வேடிக்கையான விஷயங்களே இந்த தொடரின் அடிநாதம்.

இந்த தொடரைப்போல பல இதழ்களில் இவர் வரைந்து இருந்தாலும் (குறிப்பாக கல்கி மற்றும் கோகுலத்தில்) பூந்தளிரில் கிடைத்த வரவேற்ப்பு போல வேரு எந்த இதழிலும் கிடைக்கவில்லை. இவருடைய மரணத்திற்க்கு பிறகு இவரது மகள் தனது தந்தையின் நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து ஒரு சீடியாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியிட விரும்பினார்.

இந்த பதிவில் இருக்கும் ஓவியங்களை அளித்த நண்பர் பேயோனுக்கும், வெங்கடேஸ்வரனுக்கும் நன்றி.

பிற்சேர்க்கை: நண்பர் மாயாவி சிவா அவர்களின் நல்ல உள்ளம் காரணமாக ஓவியர் சுதர்ஸனின் இன்னும்  சில அருமையான நகைச்சுவை துணுக்குகளை காணும் வாய்ப்பு நமக்கு கிட்டியுள்ளது. இவை எல்லாமே கல்கி வார இதழில் இருந்து 1965-1970 கால கட்டத்தில் வெளியானவை. அப்போது இருந்த சில நடைமுறை வழக்கங்களை கருத்தில் கொண்டு இவை வெளியானது.

தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்ற சட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் வெளியான நகைச்சுவை துணுக்கு இது.

அலுவலக நகைச்சுவை என்பது குமுதத்தில் வெளியாகும் அரசர்-மன்னர் காலத்து ஜோக் போல பழைய டெம்ப்ளேட். ஒருகாலத்தில் கொண்டை போட்ட பெண்களுக்கு அலுவலக டைப்பிஸ்ட் வேலைகள் சுலபமாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஒட்டி இந்த நகைச்சுவை எழுதப்பட்டு இருக்கவேண்டும்.

கல்லூரியில் புத்தகங்கள் மற்றும் அவற்றின் சுமை (படிப்பது, சுமப்பது என்று இரண்டு விதத்திலும்) கூடிக்கொண்டே வருவதை கிண்டலடிக்கும் நகைச்சுவை இது. இதுதான் பின்னர் LKG, UKG புத்தகப்பை ஜோக் ஆக மாறி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.




எண்பதுகளில் வந்த கார் ரிப்பேர் ஜோக்குகள் நினைவிருக்கிறதா? காரை தள்ளினால்தான் அது ஓடும் என்று சொல்லி, அதை பலரை வைத்து தள்ளி, தள்ளி போகவேண்டிய இடத்துக்கு சென்று சேர்க்கும் மொக்கை ஜோக்குகள் அவை. அவற்றின் ஆரம்ப புள்ளி இந்த ஸ்கூட்டர் நகைச்சுவைகளாகவே இருந்திருக்க வேண்டும் (என்று நினைக்கிறேன்).


இன்னுமொரு ஸ்கூட்டர் நகைச்சுவை:

கியாஸ் சிலிண்டர் வந்த புதிதில் தொலைபேசி இணைப்பு போல பதிவு செய்துவிட்டு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி இருந்தது இந்த தலைமுறைக்கு கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இந்த நகைச்சுவைக்கு ஒரு புன்முறுவல் கூட கிடைக்காது என்று நம்புகிறேன்.
 


அடுத்த அ.அ.ஓ பதிவில் விரைவில் சந்திப்போம். 

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin